சனி, ஜூன் 27, 2015

கல்வெட்டுகளில் முத்தரையர்...! - விருதுநகர் மாவட்டம்.






வரிசை எண் 1.

கல்வெட்டு அமைந்துள்ள இடம்:
 விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், கல்லுமடை கிராமம் திருநாகேசுவரமுடையர் கோயில் தென்புறக் கல்.

கல்வெட்டு :
* ஸ்ரீ கோனோற்றமை கொண்டான் பருத்திக்கு
டிநாட்டு பாப்பார சான்றார்க்கும் பாற்குடி
களுக்கும் பிரமதேய கிழவர்க்கும்
‘கேரள சிங்க முத்தரைய’னாயின ‘மகாதேவன் மரு
தன்’ சாழ நாட்டு திருப்பாலை ஊர் தேவருக்கும்....”
“ சொன்னமையில் சாணாட்டு திருப்பாலை ஊர்
வர்க்கு தேவதானமாக தங்கணாட்டு மேன்முக்
குளத்து கேரளசிங்க முத்தரையனான மகாதேவன் மருதன் தன் காணிப்பற்றில்...”


கல்வெட்டு விளக்கம்:

கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ள “கேரளசிங்க முத்தரையனான மகாதேவன் மருதன்” என்பான், மேன்குளத்திலுள்ள தமது காணிப்பற்றினைச் சார்ந்த புலக் குளத்துச் சேல்கல் நிலத்தை சாழநாட்டு திருப்பாலையூர் இறைவனுக்கு இறையிலியாக (தானமாக) அளித்த செய்தியினை கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டின் காலம் சரிவரத் தெரியவில்லை என்றாலும் எழுத்தமைதியைக் கொண்டு நோக்குமிடத்து இது முற்காலப் பாண்டியர் காலத்தியதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 
மேலும் இந்தக் கல்வெட்டில் "வலையகற்பக நல்லூரான பெருமூர்" என்ற ஊரும் குறிக்கப்பெற்றுள்ளது. முத்தரையர்களும் வலையர்களும் ஒருவரே என்பதை நிறுவும் விதமாக பழங்காலச் சான்றுகளில் முத்தரையர்களின் ஊர்ப் பெயர்கள் பலவும் "வலைய..." எனும் முன்னொட்டுடனே தொடங்குவதை இங்கு நினைவில் கொள்ளவும்.

ஆதாரம்; விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் (203 / 2005).


வரிசை எண் 2.  

கல்வெட்டு அமைந்துள்ள இடம்:
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், கல்லுமடை கிராமம் திருநாகேசுவரமுடையர் கோயில் , கோச்சடையான் மாறன் காலம் (10-ம் நூற்றாண்டு), இந்திய கல்வெட்டு ஆராய்ச்சி அறிக்கை (ARE)- 291/ 1977-78.

கல்வெட்டு :

* “கோச்சடைய மாறற்கு யாண்டு இதனெதிரா
மாண்டு சாழநாட்டு தேவதானம் திரு
ப்பாலை ஊர் வடரார்கு பருத்தி
திக்குடி நாட்டு மேன்முக் குள
த்து கேரளசிங்க முத்தரையனா
யின மகாதேவன் மருதன் திருநெ
ந்தா விளக்கு ஒன்று எரிய....” 

கல்வெட்டு விளக்கம்:

சாழ நாட்டிலுள்ள திருப்பாலையூரிலுள்ள சிவன் கோயிலின் இறைவனுக்கு பருத்திக்குடி நாட்டு மேன்குளத்தைச் சேர்ந்த “கேரளசிங்க முத்தரையன்” என்ற குடிப்பெயர் கொண்ட ‘மகாதேவன் மருதன்’ என்பான், நந்தா விளக்கு எரிக்க 25 பசுக்களைத் தானமாக வழங்கினான் என்பதை கல்வெட்டு எடுத்துச் சொல்லுகிறது.


வரிசை எண் 3.  

கல்வெட்டு அமைந்துள்ள இடம்:
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், கல்லுமடை கிராமம் திருநாகேசுவரமுடையர் கோயில் , வடபுற அதிட்டானத்திலுள்ள கல்வெட்டு. எம்மண்டலமும் கொண்டருளிய மாறவர்மன் குலசேகரப் பாண்டியனின் காலத்தியது (கி.பி. 1285). இ.க.ஆ.அ. 287/ 1977-78.

கல்வெட்டு:

* பருத்திகுடி நாட்டுப் பூம்பிழால் முத்தரையர் கோட்டை ஊ
ரோமும் கண்மியர் கோட்டை ஊராயிசைந்த ஊரேமு
மாடக் குளக்கீழ் மதுரை வடபால்...”

கல்வெட்டு விளக்கம்:

இந்தக் கல்வெட்டின் மூலம் அறியலாகும் செய்தி யாதெனில் அக்காலத்தில் பருத்திக்குடி நாட்டில் முத்தரையர் கோட்டை, கண்மியார் கோட்டை என்ற பெயரிலமைந்த இரு கிராமங்கள் இருந்துள்ளன. அவ்வூர் மக்கள் திருவையாற்று ஏம்பலான திருஞான சம்பந்த நல்லூரான மதுரை வடபால் உள்ள ஊரினை, வாது செய்த வாரணபுரத்து கைக்கோளர் தேவன் சுந்தர பாண்டியருக்கு விற்றுக் கொடுத்துள்ளனர். பின்னர் அந்த ஊர், திருப்பாலையூர் ஈசுவரமுடையார் கோயிலுக்கு தானமாகத் தரப்பட்டது. இதற்கான உடன்படிக்கையில் முத்தரையர்கள் பலர் கையெப்பமிட்டுள்ளனர்.

வரிசை எண் 4.

கல்வெட்டு அமைந்துள்ள இடம்;
திருச்சுழி வட்டம் , கல்லுமடை கிராமம் 'திருநாகேசுவரமுடையர் கோயில்' கருவறையின் மேல்புற அதிட்டானம்...
காலம்: மாறவர்மன் குலசேகரப் பாண்டியனின் 37வது ஆட்சியாண்டு( கி.பி 1305)

கல்வெட்டு;

" பருத்திகுடி நாட்டு பூம்பிழால் முத்தரையன் கோட்டை காரணவரும் கண்மியார் கோட்டை காரணவரும் இவ்வனைவோமும் கல்வெட்டில் கொடுத்த பரிசாவது..."

கல்வெட்டு விளக்கம்;

முத்தரையன் கோட்டையின் முக்கிய நபர்களும், கண்மியர் கோட்டை கிராமத்தவர்களும் இணைந்து , மதுரைக்கு வடக்கிலுள்ள வாதுசெய்த வாரணபுரத்து கைக்கோள் தேவாரமழகியான் என்பவனுக்கு திருப்பாலையூர் குளத்தால் நீர் பாயும் நிலத்தை 300 வராகன் பணத்திற்காக விற்றுக் கொடுத்துள்ளனர். மேலும் இந்நிலத்தின் வரிகள் திருப்பாலையூர் கோயிலுக்கு அளிக்கப்பட்டதையும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
சான்று; இந்திய கல்வெட்டு ஆய்வு அறிக்கை 288/1977-78.


வரிசை எண் 5.

 கல்வெட்டு அமைந்துள்ள இடம்;
திருச்சுழி வட்டம் , கல்லுமடை கிராமம் 'திருநாகேசுவரமுடையர் கோயில் தென்புற அதிட்டாணம், கி.பி. 1264ம் ஆண்டைச் சேர்ந்தது.

கல்வெட்டு;

" இராசசிங்க குளக்கீழ் இராசேந்திரத்து முதலியார் பூவனரான சிநுங்க தேவர்க்கு பருத்திக்குழி நாட்டு பூம்பிழால் முத்தரையன் கோட்டை
கண்மியார் கோட்டை ஊராரிசைஞ்ச ஊரோம் காணி விலைப் பிராமணம்..."

கல்வெட்டுச் செய்தி;
இரு ஊர் மக்களும் சேர்ந்து சிநுங்க தேவர் என்பார்க்கு குறிப்பிட்ட ஒரு ஊருக்கான காணியாட்சி உரிமையை வழங்கிய செய்தியினைக் கூறுகிறது.
சான்று; இ.க.ஆ.அ 284/1977-78

வரிசை எண் 6. 

கல்வெட்டு அமைந்துள்ள இடம்;
 திருச்சுழி வட்டம் , கல்லுமடை கிராமம் 'திருநாகேசுவரமுடையர் கோயில்' , கி.பி 1245 ம் ஆண்டைச் சார்ந்த கல்வெட்டு.

கல்வெட்டு :

"அழகன் வகைக்கு பூம்பிழால் முத்தரையன் கோட்டை கண்மியார் கோட்டை காரணவரும்...
இது இராசசிங்கத் தரையன் தற்குரிக்கும் இப்படிக்கிவை சாயப்படை முத்தரையன் எழுத்து"

கல்வெட்டுச் விளக்கம் ;

ஊராரிடமிருந்து கற்குளத்து கண்ண நாராயன குமாரண தேவன், நஞ்சமான் குணமான கலங்காத கண்ட பேரேரியை விலைக்கு வாங்கி கோயிலுக்கு தானமளித்தான். இதற்கான சாட்சிக் கையெழுத்தை முத்தரையன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த நாசக னாழ்வனான சாயப்படை முத்தரையனிடமிருந்தும் பெற்றுள்ளனர்.
சான்று; இ.க.ஆ.அ: 283/1977-78.

வரிசை எண் 7.

 கல்வெட்டு அமைந்துள்ள இடம் :
திருச்சுழி திருமேனிநாத சுவாமி கோயில். அர்த்தமண்டபச் சுவர். கல்வெட்டு பதினோராம் நூற்றாண்டைச் சார்ந்தது.

கல்வெட்டு:

"...ணி முத்தரைய நாயிச திருநந்தாவி ளக்கு ஒன்று இரவும் பயொடுக்கு..."

கல்வெட்டுச் விளக்கம் :

ஆலயத்தில் நந்தா விளக்கெரிக்க முத்தரையன் ஒருவன் கொடை அளித்துள்ள செய்தியைக் குறிப்பிடுகிறது.பாதிக் கல்வெட்டு சிதைந்துள்ளது

சான்று: விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் 180/2005.

சனி, மே 02, 2015

சங்க இலக்கியத்தில் வலையர்கள்...! பகுதி (01)

பதினைந்தாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தமிழ் நிலத்தில் வாழ்ந்த “வலையர்கள்..! ”


                                               இனக்குழுக் குமுகம் என்பது தமிழினத்தின் தனித்துவம்! தமிழர் இனம் கலப்பினம் ஆவதைத் தடுத்தது மற்றும் ‘யாரெல்லாம் தமிழர்’ என்கிற அடிப்படைக் கேள்விக்கு விடை பகருவது சாதி ஒன்றுதான். இதனை உணர்ந்ததால்தான் தமிழர்களின் ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றிய வடுகர்கள் சமத்துவம் என்கிற போர்வையில் ‘தமிழரின் சாதியை’ (மட்டும்) இதுகாறும் ஒழித்திட முனைந்தனர். ஆனால் அதையும் கடந்து தமிழினம் இன்றும் தமக்குரிய பண்டை வரலாற்றுப் பாரம்பரியங்களைத் துளியும் இழக்காது தலை நிமிர்ந்து நிற்கிறது.


புறநானூற்றுக் (எட்டுத்தொகை நூல்களில் ஒன்று) காலத்தில் தமிழகத்தில் இருந்தது நால்வகைச் சாதியே அவையாவன பறையன், பாணன், துடியன், கடம்பன் என்பன. அதன் பின்னர் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தமிழரிடையே மேலும் சில சாதிகள் பிறந்தன. இதற்கான குறிப்புகள் “சங்க இலக்கியங்கள்” எனப்படும் தொகுப்பிலுள்ள நூல்களில் உள்ளன. பல்கிப் பெருகிவிட்ட இன்றைய சாதி அமைப்பில் ஆதிக்கம் பெற்றுள்ள பல சாதிகள் அன்றைக்கு இருந்ததற்கான சுவடே இல்லை. ஆனால் மருத(வயல்சார்) நிலப்பகுதிகளிலும்,நெய்தல்(கடல்சார்) பகுதிகளிலும் வலைஞர்/வலைவர் எனும் பெயரில் வேட்டை, மீன்பிடிச் சமூகம் ஒன்று வாழ்ந்ததற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களிலில் ஏராளாமாக உள்ளன. இந்த வலைஞர்களே இன்றைய வலையர்கள், வலையர் என்பதன் செய்யுள் வடிவாய் வலைஞர்/ வலைவர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதாய் அப் பனுவலுக்கு விளக்கவுரை எழுதும் ஆசிரியர்கள் அனைவருமே குறிப்பிடுகின்றனர். மேலும் கேரளத்தில் வாழும் வலையர்கள் இன்றும் “வலைஞர்” என்றே அழைக்கப்படுகின்றனர்.
அந்தவகையில் “பெரும்பாணற்றுப்படை” எனும் நூலில் வலையர்களைப் பற்றி, வலையர்களின் வாழ்வியலைப் பற்றி, வறியோருக்கு வாரி வழங்கும் அவர்தம் வல்லான்மையப் பற்றி, உணவு முறைகளைப் பற்றி இடம் பெற்றுள்ள தகவல்களை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன். தமிழினக்குழுக்களில் வலையர்கள் எவ்வளவு பழமையானவர்கள் என்பதை அறிந்திட அவை உதவும்!


பெரும்பாணற்றுப்படை;

                                                  காஞ்சியை ஆண்ட “தொண்டைமான் இளந்திரையன்” எனும் குறுநில மன்னனிடமிருந்து பரிசில் பெற்றுத் திரும்பும் ஒரு பெரும்பாணன் (பெரும்பாணன்= பேரியாழ் கொண்டவன்) வழியில் காணும் இன்னொரு பாணனின் வறிய நிலை கண்ட பாணன் அவனை ஆற்றுப்படுத்தும் விதமாய், இளந்திரையனைச் சென்று சந்திப்பதற்கு அவனுக்கு வழி சொல்லுகிறான். அப்படிச் சொல்லிவரும் பொழுது அவன் முதலில் எயினர் (வேட்டுவர்) குடியிருப்பைக் குறிப்பிடுகிறான்,அடுத்து இடையர் குடியிருப்பு, உழவர் குடியிருப்பு முதலியவற்றை குறிப்பிட்டுவிட்டு மருத நிலம் பற்றிச் சொல்லுகையில் வலையர்களின் குடியிருப்பைக் குறிப்பிடுகிறான். அதில் இடம்பெற்றுள்ள செய்திகளைக் கீழே காண்போம்...


பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட வலையர்களின் குடில்...!

 
                                                                         கடற்கரையை அடுத்து மீன்பிடித் தொழில் செய்த வலையர்களின் குடில்கள் வரிசையாக அமைந்திருந்தன. அவர்தம் குடிலின் கூரைகள் பேய் கருப்பந்தட்டை(அ) கொருங்கைச்சி (சோளத்தட்டை)களைக் கொண்டு அமைக்கப்பெற்றிருந்தன. குடிலின் உட்புறம் இடை இடையே வஞ்சி, காஞ்சி மரங்களாலான தூண்களை கயிற்றினைக் கொண்டு கட்டியிருந்தனர், அதன் மேற்புறத்தே வேழக்கோரையை வரிச்சாக நிறைத்து அதனைத் தாழை நாரால் கட்டித் தருப்பை புல்லால் வேயப்பட்ட குடில்களில் வாழ்ந்தனர். அவர்களின் வீட்டு வாசலிலே பறி எனும் மீன் பிடிக் கருவிகள் எப்போதும் கிடக்குமாம். நெய்தல் நில மரமான புன்னை மரத்தினது வளைந்த கால்களை வீட்டின் முன்புறம் நட்டு அதனைப் பந்தலாக்கி அவற்றின் மீது வலையர்கள் புடலை, பாகை, சுரை போன்ற கொடிகளைப் படரவிட்டிருந்தனர், அதன் காய்கள் எப்போதும் கீழ் நோக்கித் தொங்கிக் கொண்டிருக்குமாம். பந்தலின் அடியிலே வெண்மணலைப் பரப்பி, அதன் மேலமர்ந்து கொடிகளின் நிழலில் குடும்பத்தோடு கதையளந்து கொண்டிருப்பனராம்.

மேலும் அவர்களின் இல்லத்தின் அருகிலேயே கருமையான, ஆழம் கொண்ட குளங்கள் இருக்குமாம்.அதில் புலால் நாற்றமுடைய அம்பு போன்ற இறால் மீன்கள் நீந்திக் கொண்டிருக்குமாம். அந்த இறால்களையும் அவ்வலையர்கள் வலை வீசிப் பிடிப்பனராம். கோடை காலத்தில் கூட அக்குளங்களில் ஓர் ஆள் உள்ளிறங்கி கைகள் தூக்கிடும் தோள் உயரத்திற்கு மேலுள்ள ஆழத்தில் தண்ணீர் இருக்குமாம். எனவே அக்கால மீனவ வலையர்கள் செல்வச் செழிப்போடு, மன நிறைவுற்ற ஒரு வாழ்வை வாழ்ந்துள்ளது புலனாகிறது். இதனை...

                                         வேழம்நிரைத்து,வெண்கோடு விரைஇ,
                                         தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த,
                                         குறியிறைக் குரம்பைப் பறியுடை முன்றில்,(265)

                                         கொடுங்கார் புன்னைக் கோடுதுமித்து இயற்றிய
                                         பைங்காய் தூங்கும் பாய்மணற் பந்தர்,
                                         இணையரும் முதியரும் இணையுடன் துவன்றி,
                                         புலநுனைப் பகழியும் சிலையும் மான,
                                         செவ்வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும் (270)
                                         மைஇருங் குட்டத்து மகவொடு வழங்கி
                                         கோடை நீடினும் குறைபடல் அறியாழ்
                                         தோள்தாழ் குளத்த கோடு காத்திருக்கும்
                                         கொடுமுடி “வலைஞர்” குடிவயிர் சேப்பின்.


என்ற வரிகள் மூலம் கடியலூர் உருத்திரங்கண்ணர் குறிப்பிடுகின்றார்.
அந்தக் குளத்தை வளைந்த முடிகளைக் கொண்ட அவ்வலையர்களே காவல்காப்பனராம். இதனையெல்லாம் குறிப்பிட்டு அப்பாணன், ‘நீ அவர்களின் இல்லத்தில் சென்று தங்கலாம்’ என்று இன்னொரு பானனிடம் சொல்லுகிறான். மேலும் அவ்வலையர்களின் விருந்தோம்பல் பண்பையும் அவனிடத்தே எடுத்துச் சொல்லுகிறான்.


வலையர்களே தயாரித்த கள்! ;
                                                  
                                               அவையா அரிசி அம்களித் துழவை (275)
                                               மலர்வாய்ப் பிழாவில் குரும்பி ஏய்க்கும் 
                                               பாம்புஉறை அடை அனைஇத் தேம்பட

                                               எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி,
                                               வளவாய்ச் சாதியின் வழைச்சுஅற விளைந்த,
                                               வெந்நீர்,அரியல் விரல்அலை,நறும்பிழி,
                                               தண்மீன் ஆட்டோடு தளர்தலும் பெறுகுவீர்


                              வலையர்கள் தமது குடிலிலே குற்றாத கொழியல் அரிசியை பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் இட்டு களி போன்று கூழ் சமைப்பர். மேலும் அதில் புற்றாம் சோறு போன்ற நெல்முனையை இடித்துக் கலப்பனராம். அதனை இரண்டு நாட்கள் இரவும் பகலும் ஊற வைத்து பின்னர் உறுதியான பெரிய சாடியில் அதனைக் கொட்டி, வெந்நீரை அவற்றுள் ஊற்றி வேக வைப்பனாராம். பின்பு கையால் துழவி நெல் அரிப்பால் அதனை வடிகட்டுவர். அது சுவையான மதுவாக அமையும். இப்படித் தமக்குத் தேவையான மதுவை தொண்டைநாட்டு வலையர்கள் தாமே தயாரித்துக் கொண்டனராம். அந்த மதுவையும், சுட்ட மீனையும் பாணனே உனக்கு அமுதாக வலையர் படைப்பர், சோர்வைப் போக்க நீயதை உண்ணலாம் என்று பரிசில் பெற்ற பாணன், மற்றொரு பாணனிடம் சொல்லுகிறான்.

புதன், பிப்ரவரி 04, 2015

தானமநாட்டு அம்பலகாரர்

தானம நாட்டு அம்பலகாரர்....! (வரலாற்றின் வழியே சிறு தேடல்)


தானம நாடு...

              இன்றைய புதுகை,தஞ்சை மாவட்டங்களின் எல்லைப் புறத்தில் அமைந்துள்ள சமதளப் பரப்பு.முன்னொரு காலத்திலும் அப்படித்தான் இருந்தது சோழ,பாண்டிய நாடுகளின் எல்லைக் கோடாகவும், அவ்விரு நாடுகளுக்குமிடையே கடும் போர் நடைபெறுகின்ற காலகட்டத்தில் இரு நாட்டுப் படை வீரர்களும் மோதிக் கொள்ளும் களமாகவும். அப்படி ஆயிரம் ஆயிரம் போர் மறவர்கள் சிந்திய இரத்ததால்தானோ என்னவோ...இன்றளவும் இப்பரப்பின் மணல்கள் இரத்தச் சிவப்போடு செம்மண்ணாகவே காட்சியளிக்கின்றது!

விசயாலயச் சோழரும் அவருக்குப் பின்னர் அரியனை ஏறியோருமான "பிற்காலச் சோழர்கள்" சோழ நாட்டை பன்னிரு நாடுகளாக பிரித்தாண்டனர்.அப்படிப் பிரிக்கப்பட்ட பன்னிரு நாடுகளின் ஒன்றான இராஜராஜ சோழ வளநாட்டின் ஒரு பகுதியே இன்றையத் தானமநாடு.வெள்ளாற்றின் வடக்குப் புறத்தில் அமைந்துள்ள இப்பரப்புகள் தானவ(ம) நாடு என்று பெயர் பெற்றது முதலாம் இராசேந்திரச் சோழனின் காலத்தில்தான். ஆனாலும் அதற்கு முன்னரே இப்பரப்புகள் இப்பகுதியில் வாழ்ந்த 'அரையர்' என்போரால் ஆளப்பட்டதற்கான சான்றுகள் கல்வெட்டுக்களாகவும்,செப்புப் பட்டயங்களகவும் ஏராளம் உண்டு.ஆனாலும் 'தானவர் எனும் பட்டம் பெற்ற அரையர்' இப்பரப்புகளை ஆளத்தொடங்கியதன் பிறகே (இராசேந்திரச் சோழரின் காலம் தொட்டு) இவை தானவ நாடு என்று பெயர் பெற்றது.அதற்கு முன்னர் அம்பில் நாட்டோடு இணைந்து புன்றில் கூற்றத்திலேயே அடங்கியிருந்தது.


உள்ளடங்கும் ஊர்கள்;
                 
              வடகாடு,மாங்காடு,கொத்தமங்கலம்,கீரமங்கலம்,அணவயல்,கீழாத்தூர்,மேலாத்தூர்,  
புள்ளான்விடுதி,நெடுவாசல்,ஆவணம்,சேந்தன்குடி,நகரம்,வேம்பங்குடி,சித்தாதிக்காடு,சானாகரை,பைங்கால்,செரியளூர்,பனங்குளம்,மறமடக்கி,குளமங்கலம்,பாண்டிக்குடி,மேற்பணைக்காடு,கொடிக்கரம்பை,பட்டத்தூரணி,நெய்வத்தளி,கண்டியூர்(கல்வெட்டுக்களில் சோழசிகாமணிபுரம் என்று குறிக்கப்பட்டுள்ளது,தற்பொழுது இவ்வூரின் நினைவாய்ச் சிறு சிவன் கோயில் மட்டுமே உள்ளது),செங்கமங்கலம்,அம்மையாண்டி,வீரராகவபுரம்,பஞ்சநதிபுரம்,ஏனதிகரம்பை,கரம்பக்காடு,செருவாவிதி,சித்துக்காடு,
திருச்சி்ற்பல்,,பொக்கன்விடுதி,களத்தூர்,கருக்காகுறிச்சி,பேராவூரணி,கடாரம் கொண்ட சோழபுரம் (தானம நாட்டின் தலைநகரம் இதுதான்,ஆனால் இப்பொழுது காணாமல் போய்விட்டது!)

அம்புலி ஆறு,வில்லுனி ஆறு,அக்கினி ஆறு போன்றவை இப்பகுதியில் உள்ள காட்டாறுகள் ஆகும்.இவற்றுள் அம்புலியாற்றை மையமாகக் கொண்டு வட தானமநாடு,தென் தானமநாடு என இப்பகுதிகள் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.குறிப்பாக வடகாடு மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பரப்புகள் வட தானமநாடு எனவும்,கொத்தமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பரப்புகள் தென் தானமநாடு எனவும் குறிக்கப் பெறுகின்றன.வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்திலேயே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு அதாரமாக வட தானம நாட்டைச் சார்ந்த "வடகாடு" திகழ்கின்றது. வடகாட்டில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழி அதை உறுதிபடுத்துகிறது.1981 ம் ஆண்டு தொல்பொருள் ஆய்வுத் துறையினர் ஆய்வினை மேற்கொண்டு இவ்வுண்மையை வெளிக்கொணர்ந்தனர்.
மேலும் தானம நாட்டின் தாய் கிராமமாக கொத்தமங்கலம் கிராமமே கருதப்படுகின்றது.இவ்வூரிலிருந்து பெறப்பட்ட 'கொத்தமங்கலம் செப்பேட்'டின் மூலமாகவே 'பதினோராம் நூற்றண்டு முதல் தானவ நாடு என்று அறியப்பட்ட இந்தப் பகுதி பதினைந்தாம் நூற்றாண்டின் பின்னர் தானம நாடு-தானம வளநாடு (இன்றையச் சூழலில் தானாண்மைய நாடு) என்று பெயர் பெற்றதாக அறிந்துகொள்ள முடிகிறது'.

"விருதராச பயங்கர வளனாடாகிய,கானாடான,சிங்ககுலகாரானூர் நாடான ராசலெச்சனிக வளநாடான தானம வளநாடு" என்று தொடங்கும் இந்தச் செப்பேட்டை 15,16 ம் நூற்றாண்டுவாக்கில் இப்பகுதியை ஆண்டோரான "வாணதிராயர்கள்" என்போர் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த எட்டு கரைகாரர்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளதாக அமைந்துள்ளது,அவர்கள் யாரெனில்

*மணவாளன் முத்திரியன்,
*கருவாண்டான் முத்திரியன்,
*நன்ன பெரியான் முத்திரியன்,
*வெள்ளியன் முத்திரியன்,
*சுண்டாங்கி முத்திரியன்,
*குளூனரி முத்திரியன்,
*கொங்குராயன் முத்திரியன்,
*சங்கர விசாலையன் முத்திரியன்...போன்றொராவர்.
ஆட்சி செலுத்திய மன்னவர்கள்;
குலோத்துங்கச் சோழ தானவதரையன் (எ) மதுராந்தகன் வாழவந்தப் பெருமான் (சோழருக்கு கட்டுப்பட்டு-முதலாம் இராசேந்திரச் சோழர் காலம் துவங்கி),
சுந்தர பாண்டியன் (எ) வாழவந்தப் பெருமான் (பண்டியர்களுக்கு கட்டுப்பட்டு-மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் காலம் துவங்கி),
வாழவந்தப் பெருமாள் (எ)காளிங்கராயா( வீரசேகர் எனும் பாண்டிய மன்னருக்கு(???) கட்டுப்பட்டு).
மேலும் பல மன்னர்களின் பெயர்கள் தெரியவில்லை,ஆனாலும் பதினெட்டாம் நூற்றாண்டுவரை தானவதரையர்,மதுராந்தகன்,வழவந்த பெருமாள் உள்ளிட்ட பட்டங்களைப் பெற்று இவர்களின் ஆட்சி தொடர்ந்தது. இவர்கள் சோழர்,பாண்டியர் போன்றோரின் மேலான்மையை ஏற்றிருந்தாலும் 'தமது பகுதியில் தான் வைத்ததே சட்டம்' என்கிற ரீதியில்தான் ஆண்டனர்.


விசயநகர மன்னர்கள் காலத்தில் சிதறுண்டுபோன தானமநாடு;

                      தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட விஜய நகர மன்னர்கள் கோதாவரிக் கரையிலிருந்து புறப்பட்டு வந்து,தமிழகத்தை வென்று,தமிழ் மன்னர்களைத் தமக்கு அடிமை ஆக்கினர்.அதுமுதல் தமிழ் மொழி சிதைவடைந்து,தமிழர்களின் பழம்பெரும் பண்பாட்டு நெறிமுறைகள் ஓரம் கட்டப்பட்டு,முன்னைத் தமிழ் மன்னர்கள் அக்கியிருந்த கட்டமைப்புகளும் சிதறுண்டுபோனது...தமிழ்நாடே ஆட்டம் கண்டதன் பிறகு தானம நாடு மட்டும் தப்புமா என்ன?!. வட தானம நாடு புதுகை தொண்டைமான்(கள்ளர்) மன்னர்களுக்கும்,தென் தானமநாடு சேதுபதி மன்னர்களால் தஞ்சை மராட்டியரிடத்திலும் ஒப்படைக்கப்பட்டது.இதில் குறிப்பிடத்தக்க விடயம் தென் தானமநாட்டின் "சேந்தன்குடி" தலைமையில் நாயக்கர்களால் புதியதொரு பாளையம் அமைக்கப்பட்டது. அதில் கொத்தமங்கலம்,குலமங்கலம்,பனங்குளம்,கீரமங்கலம்,நகரம் உள்ளிட்ட கிராமங்கள் இணைக்கப்பட்டன.இந்த ஆறு கிராமங்களை உள்ளடக்கிய பாளையத்தின் தலைவராக-பாளையக்காரராக- நியமிக்கப்பட்டோர் "வழுவாட்டித் தேவர்" என்ற பட்டமுடையோர்...


நம்முன் நிற்கும் கேள்விகள்...!!!
தானமர் என்னும் அரையர் எந்த இனக்குழுவைச் சார்ந்தோர்?
அவருக்கு முன்னமே வெள்ளாற்றுப் படுக்கையை ஆண்ட அரையர்கள் யாராக இருக்க முடியும்?
வாணவரையர்கள் முத்தரையர்களா?
வழுவாட்டித் தேவர் என்போர் யார்?அவர்கள் தேவர் பட்டம் பூண்டதின் காரணம் என்ன?
தாங்கள் தனித்துவம் கொண்டோர் என்று இன்றைக்கும் சொல்லிக் கொள்ளுகின்ற தானம நாட்டு அம்பலகாரர்களின் தனித்துவக் குணங்கள் யாது?
அம்பு நாட்டு வலையர்களுக்கும் தானம நாட்டு அம்பலகாரர்களுக்கும் என்ன ஒற்றுமை?


அடுத்த பதிவில் தொடரும்....

குறிப்புதவி நூல்கள்;
அ.சந்திரபொஸ் அவர்களின் "தானவ நாட்டு வரலாறு",
"புதுக்கோட்டை வரலாறு" .
 

வெள்ளி, டிசம்பர் 19, 2014




 விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே,பாலையம்பட்டு நகரில் உள்ள "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" சிலைக்கு விருதுநகர் மாவட்ட "வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம்" சார்பாக அண்ணன்களோடு சேர்ந்து மாலை அணிவித்தபோது.

வியாழன், நவம்பர் 20, 2014

"வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க"த்தின் கண்டனப் பொதுக்கூட்டம்-படங்கள்.













புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழுகின்ற  முத்தரையர் சமுதாய மக்கள்,தாம் சார்ந்த அமைப்புகளின் மூலம் சமுதாயப் பணியாற்றுவதற்கு மாவட்டக் காவல்துறை அண்மைக்காலமாக தொடர் தடைகளை விதித்து வருகின்றது, இதன் காரணமாக மாவட்டத்தில் முத்தரையர் சமுதாயத்தைச் சார்ந்த எந்த ஒரு சங்கமும் பொதுக்கூட்டங்களையோ,கொடியேற்று விழாக்களையோ,மாணவர்களுக்கான கல்விப் பரிசளிப்பு விழாக்களையோ  நடத்த முடியாத சூழலில் உள்ளன.முற்றிலும் சட்டத்திற்கு புறம்பான வகையில்,உள்நோக்கோடு காவல்துறை இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றது.முத்தரைய மக்களுக்கு எதிரான இச்செயலைக் கண்டித்தும்,இதற்குத் துணை போகின்ற காவல்துறையினரின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தும் விதமாக  கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று திருமயம் பகுதிகளில் காவல்துறையினரின் தடையையும் மீறி பல இடங்களில் கொடியேற்று விழாவும்,பெயர்ப் பலகை திறப்பு விழாவும் "வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம்" சார்பாக முன்னெடுக்கப்பட்டது.மேலும் ஆதனூர் கிராமத்தில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது,பொதுக்கூட்டத்தில்ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

வெள்ளி, நவம்பர் 07, 2014

முன்னைதமிழருள் மூத்தவர் வலையரே
தரைதனைக் கடந்து முந்நீர் அளந்தமுத் திரையரே
பெருவலை கோல்வலை வரிவலை கொண்டு
கலத்தினில் சென்று கடல்தனில்மீனைப் பிடித்தோர் அவரே
கடும்போர்க் களத்தினில் வளரியைச் சுழற்றி
பகைவனை விரட்டியப் போர்மறவரும் அவரே
அதனாலேபுகழும் பட்டினப்பாலையும் மதுரைக்காஞ்சியும் அன்னோரை
பின்னாளில் ஐங்குறுநூறும் அழகாய்ச்சொன்னது“வலைவர் தந்த கொழுமீன்” என்றவர்பெயரை...
திணை சார்ந்த தொன்மைத் தமிழரின் வரலாறு,அவர் ஆற்றியத் தொழில் சார்ந்தே சாதியாய் உருப்பெற்றது என்றே சொல்கின்றது.குறிஞ்சித் திணையில் பிறந்திட்ட தமிழன் மெல்ல மெல்ல முல்லைத் திணைக்கு நகர்ந்திட்டான்.அங்கும் நிலைக்காமல் மருதத் திணைநோக்கி நகர்ந்தாங்கே நிலைபெற்றான்,அங்கேயே அவன் நாகரிகம் அடைந்தான்,போர்த் தொழில் பயின்றான்,பிழைப்புக்கு ஓர் தொழிலும் அறிந்தான்.அதன் பின்னரே நெய்தலுக்குச் சென்றான்,கரைகடந்து கலமேறி உலகை அளந்தான்.இயங்கியல் அடிப்படையில் ஆய்ந்து பார்த்தால் தமிழர் வரலாறு/உலக மாந்தர் வரலாறு இதுவாகத்தான் இருக்கும்.மண்ணில் வாழும் குடிகளிலெல்லாம் தொன்மைச் சிறப்பு மிக்க ஒரேகுடி தமிழர் குடியே.அக்குடியிலும் முதுகுடி எதுவென்று இதுவரை ஆய்ந்தோர் சொன்னது பாணன்,பரதன்,மள்ளன் இவைதானென்று.அனால் இந்தக்குடிகளைப் போலவே,முதல் மனிதன் பிறந்த காலத்திலிருந்து இம்மண்ணில் வாழும் ஒரு குடி உண்டு,அதுதான் “வலையர்” என்னும் பெருங்குடி.அவரே வலையையும்,வளைதடியையும் முதன் முதலில் அறிந்து முறையே கடலிலும் களத்திலும் வீசிய,வரலாறு புகழும் எம் “வலைய” மக்கள். அதற்கு ஆயிரம் ஆயிரமாய் இலக்கியச் சான்றுகள் தமிழிலே உண்டு.ஆனாலும் இதை ஏனோ வரலாற்றுப் பேராசான்கள் கவனத்தில் கொள்ளவில்லை.ஒருவேளை,அன்று ஆளுமை செலுத்திய,அம்பலம் செய்த வலையர்களின் கூட்டம் இன்று அதிகாரத்தில் இல்லை என்பதாலோ???!!!
பண்டு துவங்கி நீர் சார்ந்தே மனிதனின் வாழ்வு/வாழ்விடம் அமைந்தது.மலையிலும்,காட்டிலும் மனிதன் நிலைக்காமல் மருதத்தில் அவன் வாழ்வைத் துவங்கியதன் காரணமே ‘நீர்’தான் என்றால் அது மிகையன்று.மனிதனுக்கும் பிற விலங்குகளுக்கும் உள்ள ஒரே வேறுபாடு ‘உற்பத்தித்திறன்’தான் என்பது ‘மார்க்சியம்’(சான்று-மனிதக் குரங்கு மனிதானாக மாறியதன் உழைப்பின் பாத்திரம்-பிரடெரிக் எங்கெல்சு).மனிதானால் தமக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்துகொள்ள முடியும்,மனிதனல்லாத பிற விலங்குகளால் அது இயலாது,இதுவே மனிதனுக்கும் விலங்குகளுக்குமான வேறுபாடு,தவிர பகுத்தறிவு என்பது அல்ல(பெரியாரியவாதிகளின் கவனத்திற்கு!).தமது பசியைப் போக்கிக்கொள்ள மனிதனுக்கு உணவு தேவைப்பட்டது.அந்த உணவை உறபத்திசெய்ய நீர் இன்றியமையாத ஒன்றாகியது,எனவே நீரைத் தேடிப் புறப்பட்டான்,மருத நிலத்தை வந்தடைந்தான்,மிகை அளவு நீரை அங்கே கண்டான்.அப்படி மருதத்தில் வாழ்வைத் துவங்கிய மனிதன் முதலில் நீர் நிலைகளிலும்,ஓடைகளிலும் வலை வீசி தம் பசியை ஆற்றிக்கொண்டான்,மானுட வரலாற்று ஆராய்ச்சியில் வல்லவரான தேவநேயப்பாவாணரின் கருத்தும் இதுவே.நீர் நிலைகளில் வலை வீசியது யார்?அவன்தான் வலையன்.சான்று உண்டா?உண்டு,இலக்கியத்தைக் கொண்டு ஆராய்வோம்.
ஐங்குறுநூறின் அம்மூவனார் பாடிய நெய்தல் திணையில் வரும் பாடல்
“சிறுநணி வரைந்தனை கொண்மோ பெருநீர்
‘வலைவர்’ தந்த கொழுமீன் வல்சிப்
பறைதடி முதுகுருகு இருக்கும்
துறைகெழு தொண்டி அன்னவிவள் நலனே”
///”வலைவர்”,”வலைஞர்” இவையாவும் வலையர் என்ற சொல்வழக்கின் செய்யுள் வடிவம் என்பதை நம் அறிவோம்.முக்கூடற்பள்ளு இலக்கியத்திலே வரும் மள்ளர்/மல்லர் என்ற சொற்றொடர் ‘பள்ளர்’ என்பதன் செய்யுள் வடிவு.அதுபோல வலையர் என்பதை “வலைஞர்”,”வலைவர்” என்றே செய்யுள் வழக்கில் இலக்கியங்கள் குறிப்பிடும்.
பாடலின் பொருள்;தலைவனோடு காதல் கொண்ட தலைவி,பறத்தலை கைவிட்டு தம்மை விரைந்து மணம் செய்துகொள்ளுமாறு அவனிடத்தே வற்புறுத்துகிறாள்.அதற்குச் சான்றாய் ‘கடலுக்குச் சென்று வலையைக் கொண்டு மீன் பிடிக்கும் மக்கள்,அம்மீன்களை கரைக்கு கொண்டுவந்தவுடன் அதனை வாங்குவதற்கு பலரும் போட்டியிடுவர்’.அதுபோல பருவ வயதினளாகியத் தம்மை மணம் முடிக்க பலரும் முயன்று வருவதாகவும்,அதை உணர்ந்து தம்மை விரைந்து மணக்குமாறும் அவனிடத்தே சொல்லுகின்றாள்.
இதன் மூலம் ஐங்குறுநூறு இயற்றப்பட்ட காலத்திலேயே வலையர்கள் வாழ்ந்ததும்,அவர்கள் மீன்பிடித் தொழிலைச் செய்ததும் தெளிவாகத் தெரியவருகின்றது.
அடுத்து ஒரு சான்று,பெரும்பாணாற்றுப்படை என்ற தொகை நூலிலிருந்து நூலிலிருந்து
“கோடை நீடினும் குறைப்பட வறியாத்
தோடாழ்குளத்துக் கோடுகாத்திருக்கும்
கொடுமுடி ‘வலைஞர்’ ”
பாடலின் பொருள்;கோடை நீடித்தாலும்,குறையாத ஆழமுள்ள குளத்தின் கரையினிலே மீன்பிடிக்கக் காத்திருக்கும் வலைஞர்/வலையர்.
அடுத்து ஒரு சான்று,தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை நோக்கி மாங்குடி மருதனார் பாடிய ‘மதுரைக் காஞ்சி’யிலிருந்து
“வண்டிரை கொண்ட கமழ்பூம் பொய்கை
கம்புட் சேவல் இன்துயில் இரிய
‘வல்லை நீக்கி வயமீன் முகந்து
கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்’ “
பாடலின் பொருள்;வண்டுகள் தங்கிய பூமணம் பொருந்திய பொய்கையிலே படர்ந்திருக்கும் வள்ளைக்கொடியைக் கம்புள் சேவலின் இனிய தூக்கம் களையும்படி நீக்கிவிட்டு வலையை விரித்து கொழுத்த மீன்களை பிடித்து விற்கும் வலைஞர்/வலையர்
இன்னும் ஓர் சான்று,கரிகாற்பெருவளத்தானை நோக்கி உருத்திரங்கன்னார் பாடிய ‘பட்டினப்பாலை’யில் இருந்து
“ஏமாப்ப வினிதுதுஞ்சிக்
கிளை கலித்துப் பகைபேணாது
‘வலைஞர் முன்றின் மீன்பிறழவும்’
விலைஞர்குறம்பை மாவீன்டவுங்
கொளைகடிந்துங் கனவு நீங்கியும்”
பாடலின் பொருள்;’வலையர்களின் வீட்டின் முன்பு குதித்து விளையாடும் மீன்களைப் போன்று’,இதன் மூலம் அக்கால வலைய மக்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்தனர் என்று இப்பாடல் விளக்குகிறது.
இப்படி வலை வீசிய பெருமக்களே இன்றளவும் வாழும் வலையரின மக்கள்.நீர் நிலைகளில் மட்டுமல்ல இவர்கள் காட்டிலும் வலைகொண்டு விலங்குகளைப் பிடித்தனர்(இன்றளவும் வேட்டுவ வலையராய் வாழுகின்றனர்),பரதவரும் இவரே(இன்றளவும் கடற்கரை ஓரங்களில் பர்வதராஜ குல வலையராய் வாழுகின்றனர்),மருத நிலத்தில் அம்பலம் செய்ததாலேயே இவருக்கே உரிய தனிச் சிறப்பாக “அம்பலக்காரன்” என்ற பட்டம் இன்றளவும் இவருக்கு உண்டு-இவற்றின் எச்சங்கலே இவர்கள் தரித்திருக்கும் ‘தலையாரி’,‘பாளையக்காரன்’ பட்டம்,முத்துக்குளித்து மிகை அளவு முத்துக்களை இவர்கள் பெற்றதனாலேயே இவர்கள் “முத்துராஜா”க்கலாகினர்,அம்முத்துகளை மரக்கலத்தில் ஏற்றி அயல்நாடுகளுக்கு கொண்டு சேர்த்து வணிகம் செய்ததாலேயே இவர்கள் எல்லோரும் “முத்திரையர்” ஆயினர்.
இன்னும் உண்டு ஆயிரம் சான்றுகள் இலக்கியத்தில்,இவற்றை நிறுவ,அவற்றையெல்லாம் வரும்காலத்தில் பதிவிடுவேன்.எம் வலைய மக்களே முதற்பெரும் “தமிழர்” என்ற உண்மையை நிறுவும் வரை எமது பதிவுகள் தொடரும்.